'அக்னி நட்சத்திரம்' ஒரு தரம் வாய்ந்த படைப்பு. ஆகவே அதன் மீள் உருவாக்கத்தில் (remake) கண்டிப்பாக நடிக்கமாட்டேன் என்று நடிகர் கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.
ராஜ்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள 'ரங்கூன்' விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கண்ணன் இயக்கித்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள 'இவன் தந்திரன்' வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நேற்று கெளதம் கார்த்திக் சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடுகையில், "’சிப்பாய்’, ’இவன் தந்திரன்’, ’ஹரஹர மகா தேவகி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன். இப்போது 'நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன்.
அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'அக்னி நட்சத்திரம்' ஒரு தரம் வாய்ந்த படைப்பாகும். கண்டிப்பாக அதன் ரீமேக்கில் நடிக்க மாட்டேன். எனக்கு நடிப்பின் மேல் மிகப் பெரிய ஆசையைத் தூண்டிய திரைப்படம் 'கடல்', 'ரங்கூன்' என்னுடைய முதல் வெற்றிப் படமாகும்.
நல்ல கதையும், நல்ல இயக்குனரும் அமையும் பட்சத்தில் என்னுடைய திரையுலக வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும். எப்போதெல்லாம் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மா தான். அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
கண்டிப்பாக எனக்கு காதல் திருமணம் தான். 35 முதல் 40 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.
சினிமாவில் அப்பாவுக்கு மிகச் சிறந்த ஜோடி என்றால் நக்மா மற்றும் ரேவதி என்று சொல்வேன். சினிமாவில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்றால் அது ஆர்.ஜே. பாலாஜி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, 'ரங்கூன்' படத்தில் நடித்த டேனியல் ஆகியோர் தான். நான் கதையைப் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் கலந்து பேசுவேன்.
அப்பா நான் நடித்த 'கடல்' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களைப் பார்த்துள்ளார். இப்போது படப்பிடிப்பில் அனைவரும் அப்பாவைப் பற்றிச் சொல்லும் போது தான் அவரைப் பற்றி எனக்குத் தெரியவருகிறது. அப்பா என்னை தம்பி என்று தான் கூப்பிடுவார். வருங்காலத்தில் நான் நடிக்கும் படங்களில் இன்னும் நிறைய கவனம் செலுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.