மகாவலி வலயங்களைச் சேர்ந்த சிறுவர்களின் கலை, கலாசார திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில், மகாவலி பிரதிபா கலாசார விழா இம்மாதம் 27ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் பாரிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டம் 10 வலயங்களைக் கொண்டு நாட்டின் 40 வீத பிரதேசத்தை உள்ளடக்கியுள்ளது.
மகாவலி கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர்களின் கலை மற்றும் கலாசார திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்ன் எண்ணக்கருவின் பிரகாரம் மகாவலி கலாசார செயலணி மற்றும் மகாவலி நிலையம் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன.
மகாவலி கிராமங்களில் உள்ள பிள்ளைகளின் கலைத் திறமைகளை இணங்காணுதல், கலைத் திறன்களை மேம்படுத்த வழிகாட்டுதல் இலங்கையில் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக கலாசார அம்சங்களை பிரபல்யப்படுத்த நடவடிக்கை எடுத்தல், மகாவலி வலய பிள்ளைகளுக்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் தமது திறமைகளை வெளிக்காட்டக்கூடிய தளத்தை உருவாக்கிக்கொடுத்தல் ஆகியவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
மகாவலி வலயங்களை சேர்ந்த 850 பிள்ளைகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இந்த மகாவலி பிரதிபா கலை விழாவில் இசை, நாடகம், நடனம் மட்டுமன்றி பேச்சு, சித்திரம், இசையமைப்பு குறு நாடகம் போன்ற பல்வேறு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
எதிர்கால மகாவலி என்ற கருப்பொருளின் கீழ் இந்த அனைத்து கலை மற்றும் கலாசார படைப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.