மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும் இந்தியாவும் மோதுகின்றன. இன்னொரு போட்டியில் இலங்கையுடன் நியுசிலாந்து மோதுகிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் குறித்த 9 சுவாரசிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- ஆண்கள் உலகக் கிண்ண இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மகளிர் உலகக் கிண்ண விளையாடப்பட்டது. இது 1973ஆம் ஆண்டு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது. 1975ஆம் ஆண்டில்தான் ஆண்களுக்கான உலகக் கிண்ண போட்டிகள் இங்கிலாந்தில் விளையாடப்பட்டது.
- 1973இல் வெளியேற்றும் சுற்றுகள் எதுவும் இல்லை. தொடரில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இங்கிலாந்து அணி ஆறில் ஐந்து போட்டிகளில் வென்றது.
- இரண்டாவது பெண்களுக்கான உலகக் கிண்ணத்தொடர் இந்தியாவில் நடைபெற்றது. எனினும் இந்தியா ஆண்களுக்கான உலகக் கிண்ண போட்டியை 1987இல் தான் நடத்தியது.
- 1982ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் டிக்கி பேர்ட் நடுவராக இருந்தார். இதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு உலகக் கிண்ண இறுதியாட்டங்களிலும் நடுவராக செயற்பட்ட முதல் நபர் அவர் மாத்திரமே என்ற பெருமையை பெற்றார்.
- அவுஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க், ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை எடுத்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார், இந்தியாவில் 1997இல் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 229 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டார்.
- ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட்டில் பெலிண்டா கிளார்க் இரட்டை சதமடித்தார்.
- பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணியாக அவுஸ்திரேலியா திகழ்கிறது. 1997ஆம் ஆண்டு டென்மார்க் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அவுஸ்திரேலியா 412 ஓட்டங்களைப் பெற்றது.
- பெண்களுக்கான உலகக் கிண்ண போட்டியில் ஒரு இன்னிங்ஸில் குறைந்த ஓட்டங்களை எடுத்த அணியாக பாகிஸ்தான் உள்ளது. 1997 உலகக் கிண்ண போட்டியில், அவுஸ்திரேலியாவிற்கு எதிராக வெறும் 27 ஓட்டங்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.
- இதுவரை அவுஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 3 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் பெண்களுக்கான உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன.
BBC Tamil