சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் சிவாஜி சிலையை நிறுவிட தமிழக அரசுக்கு தமிழ்த் திரையுலகினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெரினா கடற்கரையிலிருந்த சிவாஜி சிலையை அகற்றி, அதனை சிவாஜி மணி மண்டபத்தில் நிறுவியுள்ளனர்.
சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் ஒன்றிணைந்து தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள்.
“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழனாகப் பிறந்தது தமிழர்களாகிய நாம் பெற்ற பேறு. இந்திய சினிமாவை முதன் முதலில் உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்ற நடிகர் அவர். இயக்குநர் ராஜ்கபூர், சிவாஜியின் முகலட்சணம் நடிப்புக் கலைக்காகவே வடிவமைக்கப்பட்டது என்றார். அமிதாப் பச்சன் சிவாஜியின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். நடிப்பில் ஆல் ரவுண்டர் திலீப் குமார் நடிப்பில் சிவாஜிக்கு நிகர் கலையுலகில் எவருமில்லை என்று பாராட்டினார்.
அமெரிக்காவின் முன்னணி நடிகர் மார்லின் பிராண்டோ "சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணம் படைத்தவர்" என்று புகழாரம் சூட்டினார். நடிப்புக்கலைக்கு உலகின் எந்த பகுதியில் களம் அமைத்தாலும் அந்தக் களத்தில் தன் நடிப்புத்திறனால் பெரும் வெற்றி கண்டவர் நமது நடிகர் திலகம்.
இப்படி கோடானுகோடி தமிழர்களுக்கும் தன் நடிப்புத் திறமையால் பெருமையைத் தேடித்தந்தவரை அடையாளம் கண்டு அரங்கேற்றியவர் பேரறிஞர் அண்ணா. பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பாசறையில் உருவான அண்ணா, தமிழ்த் திரைப்படங்களில் அரசியலைப் புகுத்தி 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சியையே புரட்டிப் போட்டவர். அவர் அன்று கைப்பிடித்த அரியணை வேறு எவர் கையிலும் சிக்காமல் இன்றும் ஆலமரம் போல தழைத்துக் கொண்டிருக்கின்றது.
தமிழர்களும், தமிழும் ஆட்சியில் ஏறி அமர தமிழ்த் திரைப்படங்களும் தமிழ் முன்னணி நடிகர்களும் பெருமளவில் தங்களது உழைப்பை பங்களிப்பாக கொடுத்திருக்கின்றனர் என்பதை நம்மை விட அண்ணாவின் தம்பிகளுக்கு தேர்தலில் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் தமிழ் மக்கள் அறிவார்கள்.
சிவாஜி கணேசன் திரைப்படங்களில் பேசிய தமிழ் உலக மக்களிடம் தமிழ் மொழியின் வளமையை எடுத்துச் சென்றது. தமிழர் வாழ்வியல் கருத்துக்களையும், தமிழ் நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டியது.
உரைநடைத் தமிழின் நவரச உணர்வுகளையும், பேசும் செந்தமிழின் இனிமையையும், மக்களின் செவிகளில் தேனாக ஊற்றியவர் சிவாஜி கணேசன். தாய்த்தமிழ் அன்னையின் மூத்த மகனான அவர் மறையவில்லை. சாதனை புரிந்தவராக ஊடகங்களில் நம் தாய்த்தமிழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால், வங்கக் கடற்கரையில் உலவும் தமிழ்த்தென்றல் அவரது சிலையைத் தழுவியபடி அவரை பாராட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தமிழ்ப் படைப்பாளிகளாகிய எங்களது ஆவல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆவலும் கூட.
எனவே, சிவாஜி கணேசனின் நல்லுருவச் சிலையை மெரினா கடற்கரைச் சாலையிலேயே நல்லதொரு இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் நிறுவிட வேண்டும் என்று அன்புடன் எங்களது கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். இதையே உலகத்தமிழர்களின் கோரிக்கையாகக் கருதி நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்று கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.“ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.