இந்த வருட கடைசிக்குள்ள நான் நடிச்சு முடிச்ச ஆறு படங்கள் வெளியாகும்னு நினைக்கிறேன். தமிழ்ல கொஞ்சப் படங்கள் நடிச்சிருந்தாலும் இரசிகர்களுக்குப் பிடிச்சமாதிரி நடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்” என நிக்கி கல்ரானி தமிழகத்தின் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பல படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகவே அதிகம் நடித்து வருகிறீர்கள்?
“மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்தாலும், எனது கதாபாத்திரத்துக்கு என்ன முக்கியத்துவம் என்று பார்த்தே நடித்தேன். நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரிந்திருக்கும், வெறும் கிளாமருக்காக மட்டும் நான் நடித்திருக்க மாட்டேன்.“
வயது வந்தோருக்கான நகைச்சுவையை அதிகமும் கொண்ட படங்களில் நடிக்கப் பல கதாநாயகிகள் தயங்குவார்கள். நீங்கள் எப்படி ஒப்புக்கொள்கிறீர்கள்?
“உண்மைதான். அடல்ட் காமெடி அதிகமுள்ள படங்களைக் கதாநாயகிகள் விரும்புவதில்லை. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தில் கல்லூரிப் பெண்ணாக நடித்திருக்கிறேன்.“
மொழி தெரியாத நிலையில் தமிழ் வசனங்களைப் புரிந்துதான் நடித்தீர்களா?
“தமிழ் தெரியாததால் நிறைய வசனங்கள் புரியவில்லை. ஆனால், நான் பேசியுள்ள வசனங்களின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்ட பிறகே நடித்தேன். பெண்களைத் தவறாகச் சித்தரிப்பது, ஆபாசமாகப் பேசுவது போன்றவை படத்தில் இல்லை. மொழி எப்போதுமே எனக்கு ஒரு தடையாக இருந்ததில்லை. ‘ஹர ஹர மஹாதேவகி’ ஒரு முயற்சிதான். எனக்கு எப்போதுமே புது முயற்சியில் நடிப்பது பிடிக்கும்.““
பெண்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் அளிக்க வேண்டும் என்று ‘மகளிர் மட்டும்’ பட வெளியீட்டின்போது ஜோதிகா கூறியதைக் கேட்டீர்களா?
“அவருடைய கருத்து சரியானதுதான். அது இயக்குனர்களின் கையில்தான் இருக்கிறது. சினிமா பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற வேண்டும் என நினைக்கிறேன். நல்ல வாய்ப்புகள் அமையும்போது அதற்காக அதிகம் உழைக்கும் சக்தி பெண்களிடம் அதிகம் உண்டு.“
ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில்கூட உங்களைக் காண முடியவில்லையே?
“எனக்கும் சில கதைகள் வந்தன. ஆனால், எனக்கு அந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடித்து, கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று என் மனதுக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், நான் கேட்ட கதைகள் எதுவும் எனக்கு அப்படித் தோன்றச் செய்யவில்லை. மனம்தான் எனது முதல் கால்ஷீட் மேனேஜர். நான் என்ன செய்ய?
‘மரகத நாணயம்’ படத்தில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்றால் எதைச் சொல்வீர்கள்?
“‘மரகத நாணயம்’ முழுப் படமுமே சவால்தான். ஆண்குரலில் படம் முழுவதும் கதாநாயகி பேசுவதுபோல் எனக்குத் தெரிந்து எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு காட்சியையும் வாய் அசைவுகள் முதல் உடல் அசைவுவரை ஆண் தன்மையுடன் நடிக்க வேண்டும். அது மிகவும் கடினமானது. அதில் எனது கதாபாத்திரத்துக்குப் பாராட்டு கிடைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன்.“
பெரிய கதாநாயகர்களின் படங்களில் உங்களை எப்போது காணலாம்?
“தமிழில் தற்போது பத்துப் படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். விரைவில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெற்றியை நோக்கி நகர வேண்டும். ஒரே முயற்சியில் வெற்றியடைந்துவிட்டு, கீழே விழ வேண்டாம் என்று நினைக்கிறேன்.“
Source ; tamil.thehindu.com