விவேகம்' என் கதை. இது துரோகத்தின் உச்சம் என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தனது ஃபேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24ஆம் திகதி வெளியானது.
இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. சில விமர்சகர்கள் இப்படத்தை கடுமையாக சாடியும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் என்பவர் 'விவேகம்' கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் “என் படம் ’ஐ-நா’ வின் அடிப்படைக் கதையே ’விவேகம்’ படத்தின் கதை. என் படம் 2013இல் எழுதப்பட்டது. இந்த கதையை அஜித் குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொன்னேன்.
அவரிடம் ஒரு கதை வடிவமும் தந்தேன். அஜித் குமாரை சந்திக்க வைக்கிறேன் என 3 வாரம் எடுத்துக் கொண்டார். பின்னர் வந்து அஜித் புதுமுக இயக்குனடன் கதையில் நடிக்கமாட்டார் என சொல்லிவிட்டார்.
நான் ’விவேகம்’ படம் பார்த்த போது நான் சொன்னதில் 60 சதவீதம் திரையில் இருந்தது. திரைக்கதையில் சில ஒற்றுமைகள் இருந்தன. இதற்கும், இயக்குனர் சிவா மற்றும் அஜித்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது நான் உறுதியாகக் கூறுகிறேன்.
ஏனென்றால் அவர்களை நான் இதுவரை சந்திக்கவில்லை. எனவே இந்தக் கதையை திருடியது அஜித்குமாரின் நெருங்கிய நண்பரே. அவர் அப்போது என்னை அலையவிட்டு, ’விவேகம்’ படம் பார்க்கும்போது அழவும்விட்டார்.
படம் ஆரம்பிக்கும் முன்னர் படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே என்ற எழுத்துகள் வரும். நம்பமுடியவில்லை.
நான் எனது கதையை பல ஆராய்ச்சிக்குப் பின், நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எழுதியிருந்தேன். அதை அஜித்துக்கு ஏற்றவாறு எழுதியிருந்தேன். ’ஐ-நா’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளுக்கே ஒன்றரை வருடங்கள் ஆகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.